ஜேப்பியார் கல்விக் குழுமத்தில் இன்று காலை முதல் வருமான வரித் துறை சோதனை நடைபெற்று வருகிறது.
அதிமுகவை சேர்ந்தவரான, ஜே. பங்குராஜ் என்ற ஜேப்பியார் எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் தீவிர அரசியலைவிட்டு ஒதுங்கி கல்வி நிறுவனங்களில் கவனம் செலுத்தினார்.
1988ம் ஆண்டு சத்தியபாமா பொறியியல் கல்லூரியை நிறுவினார்.
பின்னர் செயின்ட் ஜோசப் பொறியியல் கல்லூரி, ஜேப்பியார் பொறியியல் கல்லூரி, பனிமலர் பொறியியல் கல்லூரி ஆகியவற்றையும் உருவாக்கினார்.
இதனைத் தொடர்ந்து சத்யபாமா பல் மருத்துவ கல்லூரி, செயின்ட் மேரீஸ் இன்ஸ்டியூட் ஆப் மேனேஜ்மெண்ட், பனிமலர் ஸ்கூல் ஆப் மேனேஜ்மெண்ட், எஸ்.ஆர்.ஆர். பொறியியல் கல்லூரி, மாமல்லன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பனிமலர் பாலிடெக்னிக் என ஏராளமான கல்வி நிறுவனங்களை உருவாக்கியவர் ஜேப்பியார்.
கடந்த 2016ம் ஆண்டு ஜூன் மாதம், ஜேப்பியார் மரணமடைந்தார்.
இந்த நிலையில் ஜேப்பியார் குழுமத்திற்கு சொந்தமான கல்வி நிறுவனங்கள் மற்றும் உரிமையாளர்கள், நிர்வாகிகளின், எழும்பூர், அண்ணாநகர் பகுதிகளில் உள்ள, வீடுகள் போன்ற இடங்கள் என சென்னையில் சுமார் 30 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்று வருகிறது.
இந்த சோதனையில் சுமார் 130 அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சோதனை மேலும் விரிவடைய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.
கடந்த பல வருடங்களாக வருமான வரி ஏய்ப்பு நடைபெற்றதாக கிடைத்த தகவலையடுத்து இந்த சோதனை நடக்கிறது.