பணம் கொடுத்தால் யார் வேண்டுமானாலும் சீட் பெற முடியும் என்பது அக்கிரமம் – எம்.பி.ஜோதிமணி அதிருப்தி..!!

பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் சீட்டு பெற முடியும் என்பது அக்கிரமம். காங்கிரஸ் கட்சித் தொண்டர்களின் ரத்தத்திலும், வியர்வையிலும் உருவானது. இதை அழிக்க யாருக்கும் உரிமை இல்லை – எம்.பி.ஜோதிமணி

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை.

வேட்பாளர் பட்டியல் வெளியாகுவதற்கு முன்பே, காங்கிரஸ் கட்சியில் வேட்பாளர் தேர்வு தொடர்பான சலசலப்புகள் ஏற்பட்டுள்ளது. 

சென்னையில் உள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு எதிராகவும் ஆதரவாகவும் தனித்தனியாக இரு தரப்பினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஜோதிமணி எம்.பி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வண்ணமாக, ‘காங்கிரஸ் தொண்டர்களின் மனதில் தற்போதும் கொந்தளித்துக் கொண்டிருக்கிற உணர்வுகளை நான் அறிவேன்.

தொகுதி வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை. நிறைய தவறு நடக்கிறது. தட்டிக் கேட்டேன். பதிலில்லை.

தொண்டர்களின் ரத்தத்தை குடிக்கும் மனசாட்சியற்ற தலைவர்களை நியாயத்தின் குரலை செவிமடுக்கவில்லை.

நீண்ட காலம் கட்சிக்கு உழைத்த வெற்றி வாய்ப்புள்ள உண்மையான விசுவாசிகள் புறக்கணிக்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாது.

பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் சீட்டு பெற முடியும் என்பது அக்கிரமம். காங்கிரஸ் கட்சித் தொண்டர்களின் ரத்தத்திலும், வியர்வையிலும் உருவானது.

இதை அழிக்க யாருக்கும் உரிமை இல்லை. உண்மையான கட்சி விசுவாசிகளுக்கு கண்முன்னால் இழைக்கப்படும் துரோகத்தை கண்டு எனது இரத்தம் கொதிக்கிறது.

எனது யுத்தத்தை நான் தொடர்வேன்’ என பதிவிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே