கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பட்டகசாலியன்விளை பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(43). மரம் கடைசல் செய்யும் பணி செய்துவந்தார்.
இவருக்கு சரஸ்வதி (37) என்ற மனைவியும், அனுஷ்கா(10) என்ற மகளும், விவாஷ் (4) என்ற மகனும் இருந்தனர். இவர் குடும்பத்துடன் ஈத்தாமொழி அருகே உள்ள சுண்டபட்டிவிளை பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் தச்சு வேலை பார்த்து வந்த கண்ணன் கடந்த இரண்டு நாட்களாக வேலைக்கு செல்லவில்லை. இதனால் அவர் வேலை பார்க்கும் கடை ஊழியர் ஒருவர் இன்று சுண்டப்பற்றிவிளையில் அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார்.
வீட்டின் கதவு மூடப்படிருந்தது. இதையடுத்து அவர் கதவை தட்டியிருக்கிறார். ஆனாலும் கதவு திறக்கப்படவில்லை.
கதவு உள்பக்கமாக மூடப்படிருந்ததால் சந்தேகம் அடைந்த கடை ஊழியர், அருகில் உள்ள வீடுகளில் உள்ளவர்களிடம் இதுபற்றி கூறியுள்ளார்.
பக்கத்து வீடுகளை சேர்ந்தவர்கள் கண்ணனின் வீடு முன்பு கூடினர். அவர்களும் கதவை பலமாக தட்டிப்பார்த்தனர். வீட்டிற்குள் இருந்து எந்த பதிலும் வரவில்லை.
இதையடுத்து அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு கண்ணனின் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் இறந்த நிலையில் கிடந்தனர். கண்ணன் கழுத்தில் தூக்கு மாட்டி இறந்த நிலையில் தொங்கிக்கொண்டிருந்தார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதியினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கண்ணன் எழுதிவைத்த கடிதம் ஒன்று கிடைத்தது. அந்த கடிதத்தில், “அன்புள்ள அம்மாவுக்கு, உன் மகள் சரஸ்வதி மற்றும் உன் தம்பி கண்ணன் எழுதுவது.
நாங்கள் உங்களை விட்டு செல்கிறோம். எங்களை மன்னித்து விடுங்கள் மற்றும் எங்கள் எல்ஐசி வங்கி பணம் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள்.
எங்கள் கையில் இருக்கும் பணத்தை எங்கள் சாவு செலவுக்கு எடுத்துக்கொள்ளவும்.
காவல்துறைக்கு, எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எங்களது இளைய மகன் விவாஷ் வலிப்பு மற்றும் வயிற்றுப் பிரச்னையால் அவதிப்பட்டான்.
எங்களால் அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. நாங்கள் கடும் மன உளைச்சலால் இருந்ததால் இந்த முடிவை எடுத்தோம். எங்கள் சாவுக்கு யாரும் காரணம் இல்லை.
இப்படிக்கு கண்ணன், சரஸ்வதி கண்ணன்” என அந்த கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.
கண்ணன் தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு பின்னர் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.