திருவனந்தபுரம்: கேரளாவில் அடுத்த மாதத்தில் நாள்தோறும் 20 ஆயிரம் கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்படும் என்று அம்மாநில சுகாதார துறை அமைச்சர் சைலஜா கூறியிருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவின் முதல் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டது கேரளாவில்தான். தொடக்கத்தில் வெகு கட்டுப்பாடுகளுடன் கொரோனா நோய் மட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கினாலும், வெளிநாடுகளில் இருந்து கேரளா வந்தவர்களாலும் கொரோனா மீண்டும் அம்மாநிலத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
நேற்று மட்டும் உச்சபட்ச அளவாக 1,564 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இது தான் கேரளாவில் ஒரு நாளில் பதிவான அதிக எண்ணிக்கையாகும். இதன்மூலம் கேரளாவில் மொத்த பாதிப்பு 39,708 ஆக அதிகரித்து உள்ளது.
இந் நிலையில் கேரளாவின் கொரோனா பாதிப்பு குறித்து அம்மாநில சுகாதார அமைச்சர் சைஷலஜா கூறி இருப்பதாவது: இந்த மாதமும், அடுத்த மாதமும் கொரோனா தொற்றுகள் அதிகரிக்கக்கூடும் என்று மருத்துவர்கள் கணித்துள்ளனர்.
குறிப்பாக செப்டம்பர் மாதத்தில் நாள்ஒன்றுக்கு அதிகபட்சமாக 20000 பாதிப்புகள் வரை இருக்கும் என்று கூறி உள்ளனர் என்று தெரிவித்துள்ளார். அவரது இந்த கணிப்பு மாநில மக்களை வெகுவாக அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.