கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ட்விட்டல் மூலம் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.
அவர் டெல்லி அருகேயுள்ள ஹரியானாவின் குர்கானில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் அவருக்கு நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையின் முடிவில் அவர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துவிட்டதாகவும், மருத்துவர்களின் அறிவுரைப்படி இன்னும் சில தினங்களுக்கு வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள இருப்பதாகவும் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பில் இருந்து குணப்படுத்த உதவிய மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவமனை ஊழியர்களுக்கு தனது நன்றியையும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
55 வயதாகும் அமைச்சர் அமித்ஷா புதிய கல்விக்கொள்கைக்கு ஒப்புதல் அளிக்கும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.
அதன் பிறகு அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனிடையே அமித்ஷா கொரோனாவிலிருந்து குணமடைந்திருப்பது பாஜக தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், கர்நாடக முதல்வர் எடியூரப்பா போன்ற தலைவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களில் முக்கியமானவர்கள்.