சுதந்திர தினத்தை ஒட்டி, காவல்துறையினருக்கு குடியரசு தலைவர் விருதினை மத்திய அரசு அறிவித்துள்ளது.
631 பெயர் அடங்கிய பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.அதில், சிறப்பாக சேவையாற்றிய தமிழகத்தை சேர்ந்த 2 காவல் அதிகாரிகளுக்கு விருது வழங்கப்பட உள்ளது.
- சென்னை ஆவடி பட்டாலியன் – 2 கமாண்டென்ட் அந்தோணி ஜான்சன் ஜெயபாலுக்கு விருது.
- போச்சம்பள்ளி பட்டாலியன் – 7 கமாண்டென்ட் ரவிச்சந்திரனுக்கு விருது.
மேலும் காவல்துறை அதிகாரிகள் 23 பேருக்கு மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் நாளை 74-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. கொரோனா தொற்று அபாயம் காரணமாக சுதந்திர தின விழாவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் மாளிகையில் வழக்கமாக அளிக்கப்படும் விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது. மறுபுறம், டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் முப்படை வீரர்கள் அணிவகுப்பில் பங்கேற்றனர்.
சுதந்திர தினத்தன்று விழா மேடைக்கு குடியரசு தலைவர், பிரதமர் மோடி உள்ளிட்டோர் வருகை தருவது போன்றும் பிரதமர் மோடி தேசிய கொடியேற்றி வைப்பது போன்றும் ஒத்திகை பார்க்கப்பட்டது.
அதேபோல, இந்த விழாவில் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிகளும் அரங்கேற உள்ளன. இதனிடையே, சுதந்திர தினத்தையொட்டி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று இரவு 7 மணிக்கு வானொலி மற்றும் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.