திமுக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தற்காலிக இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைமை எம்.எல்.ஏ., கு.க.செல்வதிற்கு கடிதம் அனுப்பியுள்ளது.
தலைமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ” திமுக தலைமை நிலைய அலுவலக செயலாளர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆகிய பொறுப்புகளில் இருந்து எம்.எல்.ஏ., கு.க.செல்வம் விடுவிக்கப்படுகிறார்.
மேலும், கழக கட்டுப்பாட்டை மீறி, கழகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதால் அவரை கழகத்திலிருந்து தற்காலிகமாக நீக்கி வைப்பதுடன், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஏன் நீக்கக் கூடாது என அவருக்கு விளக்கம் கேட்டு கடிதமும் அனுப்பட்டுள்ளது” என திமுக தலைமை கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
நேற்று கு.க.செல்வம் பாஜகவில் இணைய போவதாக தகவல்கள் வெளியாகின. மேலும், பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகனுடன், கு.க.செல்வம் நேற்று டெல்லி சென்றிருந்தார். அங்கு பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் வீட்டிற்கு சென்ற அவர் அங்கு பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதற்கிடையே அவர் பாஜகவில் இணைந்து விட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் ஜே.பி.நட்டாவை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கு.க.செல்வம், தான் பாஜகவில் இணையவில்லை என்று கூறியிருந்தார்.
திமுகவில் தனக்கு அதிருப்தி இல்லை எனவும், ஆனால் திமுக தலைமை தன்மீது நடவடிக்கை எடுத்தாலும் தான் ஏற்றுக்கொள்வதாக கூறியிருந்தார். இந்த நிலையில், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அவர் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.