தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பு மற்றும் கொரோனா பாதிப்பு நிலை குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.
1,196 நடமாடும் பரிசோதனை வாகனம் தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்புப் பணியில் செயல்பட்டு வருகின்றன.
சென்னையில் மட்டும் 70 நடமாடும் மருத்துவமனைகள் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தமிழகம் முழுவதும் சிகிச்சையளிப்பதற்கு போதுமான வசதிகள் உள்ளன.
இந்தியாவிலேயே அதிக பரிசோதனையை மேற்கொள்ளும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
காய்ச்சல் முகாம்களால் கொரோனா கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது.
முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டாலும் மக்களுக்கு தேவையான பொருட்கள் தடையின்றி வழங்கப்பட்டுள்ளன.
அரசின் வழிமுறைகளை பின்பற்றினால் நிச்சயம் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும்.
கொரோனா தொற்று தடுப்பு பணிகளில் தொற்றால் பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள், மற்றும் பல்வேறு துறை பணியாளர்கள் பூரண குணமடைய வேண்டும் என இறைவனை வேண்டிக்கொள்கின்றேன்.
மக்கள் எப்போதும் போல தங்களுடைய ஒத்துழைப்பை வழங்க வேண்டும். மக்கள் எதை விரும்புகிறார்களோ அதைத்தான் அரசு செய்து வருகிறது என முதல்வர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.