என்எல்சி விபத்தில் உயிரிழந்த ஆறு நபர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூலை 1) வெளியிட்ட அறிக்கை:

“கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், நெய்வேலியில் உள்ள அனல்மின் நிலையம் 2-ல், அலகு 5-ல் இயங்கிக் கொண்டிருந்த கொதிகலன் ஒன்று இன்று காலை திடீரென வெடித்த விபத்தில், ஆறு நபர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த மன வேதனை அடைந்தேன்.

கொதிகலன் வெடித்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த ஆறு நபர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் தகவல் கிடைக்கப்பெற்றவுடன், தீ விபத்தில் சிக்கியவர்களைப் பத்திரமாக மீட்கவும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கவும் மாவட்ட நிர்வாகத்திற்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

எனது உத்தரவின் பேரில், தொழில் துறை அமைச்சர் எம்.சி சம்பத், மாவட்ட ஆட்சியர், காவல்துறைக் கண்காணிப்பாளர், தீயணைப்புத் துறை மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து, மீட்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விபத்தில் பதினேழு நபர்கள் காயமடைந்துள்ளனர் என்ற செய்தியை அறிந்து நான் வருத்தமடைந்தேன்.

காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு உயரிய சிகிச்சை அளிக்க கடலூர் மாவட்ட நிர்வாகத்திற்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவர்கள் அனைவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தத் துயரச் சம்பவத்தில்

  • உயிரிழந்த ஆறு நபர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று லட்சம் ரூபாயும்
  • பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும்
  • லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பது ஆயிரம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்”.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Related Tags :

Anitha S

செய்தி ஒருங்கிணைப்பாளர்

Anitha S has 2821 posts and counting. See all posts by Anitha S

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே