அரசு ஆம்னி பேருந்து இயக்க நெறிமுறைகளை தந்த பிறகே பேருந்து கட்டணம் உயர்வு குறித்து முடிவு செய்யப்படும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் விளக்கமளித்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மார்ச் மாதம் முதலே ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து மூன்று முறையாக நீட்டிக்கப்பட்ட லாக்டவுன் வரும் 17-ம் தேதியுடன் முடிவடைகிறது.
இதனிடையே தமிழக அரசு சார்பில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.
மே 17-ம் தேதிக்கு பின்னர் வரும் 4-ம் கட்ட ஊரடங்கு புதிய வடிவில் இருக்கும் என்று பிரதமர் நரேந்திரமோடி அறிவித்துள்ளார்.
நான்காம் கட்ட ஊரடங்கில் பொதுபோக்குவரத்து இயக்கப்பட வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டாலும் அரசு சார்பில் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில் தமிழக அரசு சார்பில் ஆம்னி பேருந்து இயக்க அனுமதி வழங்கியதும், தற்போது ஒரு கிமீ ₹1.60 இருக்கும் கட்டணம் ₹3.20 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
கொரோனா பரவலைத் தடுக்க சமூக இடைவெளியுடன் கூடிய வகையில் பேருந்து பயணிகள் அமர வைக்க வேண்டும் என்பதாலும்; சுங்க கட்டண உயர்வாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட விளக்கத்தில் அரசு ஆம்னி பேருந்து இயக்க நெறிமுறைகளை தந்த பிறகே பேருந்து கட்டணம் உயர்வு குறித்து முடிவு செய்யப்படும் எனவும் கூறினர்.