தமிழகத்தில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரூபாய் 1000 வழங்கப்படும் என்று பேரவையில் தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனாவால் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் தமிழக அரசு அறிவித்த 144 தடை உத்தரவு இன்று (24/03/2020) மாலை 06.00 மணி முதல் அமலுக்கு வருகிறது.
கொரோனா அச்சத்தை எதிர்கொள்ள தடை உத்தரவு பிறப்பிப்பதுடன், ஏழை எளிய மக்களுக்கு ரேஷனில் பொருட்கள் கிடைப்பதையும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஒரு மாத சம்பள உதவித் தொகையும், அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு ஒரு மாத சம்பளமும் கிடைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ரூபாய் 1000 வழங்கப்படும் என்று பேரவையில் தமிழக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
வருமானம் இழக்கும் நடைபாதை வியாபரிகளுக்கு ரூ.3,250 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.
கட்டட தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவித்தார்.
ரேசன் கடைகளில் விலையில்லா அரிசி, சக்கரை உள்ளிட்ட பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என கூறினார்.
100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களுக்கு 2 நாள் ஊதியம் வழங்கப்படும் என தெரிவித்தார்.
மார்ச் மாத ரேசன் பொருட்களை பெற தவறியவர்கள் அவற்றை ஏப்ரல் மாத பொருட்களுடன் பெற்றுக்கொள்ளலாம்.
ஆனால் பாதிப்பு என்பது மிக அதிகமாக உள்ள நிலையில் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை என்பது அவர்களுக்கு போதாது என்ற கருத்து உள்ளது.
நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.1000 மற்றும் கூடுதலாக ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது பொங்கலுக்கு வழங்கப்படும் நிதியுதவியை போல குறைவானது என்ற விமர்சனமும் உள்ளது.
தற்போது கொரோனா பாதிப்பு பரவலை தடுக்க, பொது இடங்களில் கூட்டம் கூட கூடாது என்று அரசு அறிவித்துள்ள நிலையில் ரேஷன் கடைகளுக்கு சென்று இந்த நிவாரணத் தொகையை வாங்குவது சரியான நடைமுறையாக இருக்காது.
எனவே வங்கி கணக்கில் நேரடியாக இந்த பணத்தை டெபாசிட் செய்வது சரியாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ரேஷன் கடைகளில் டோக்கன் முறையில் வினியோகம் செய்யப்படும். இதனால் கூட்டம் கூடுவது தவிர்க்கப்படும் என்கிறார் முதல்வர்.