3வது நாளாக தொடரும் கேன் குடிநீர் ஆலை உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் – சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

தமிழகம் முழுவதும் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி இருக்கிறது.

தமிழகம் முழுவதும் நிலத்தடி நீர் எடுக்கும் தொழிலில் ஆயிரத்து 650 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும் 460 ஆலைகள் இயங்கி வருகின்றன.

ஆனால், அதில் 80 விழுக்காடு ஆலைகள் அனுமதியின்றி செயல்பட்டு வருவதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பான வழக்கில், சம்பந்தப்பட்ட ஆலைகள் மீது நடவடிக்கை எடுத்து, வருகின்ற 3-ம் தேதிக்குள் அறிக்கை சமர்பிக்க சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவால் அதிர்ச்சியடைந்த குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள், நிலத்தடி நீர் எடுக்க அனுமதி பெறுவதற்கான வழிமுறைகளை தமிழக அரசு விரைவாக உருவாக்க வலியுறுத்தி காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குடிநீர் கேன் தட்டுப்பாடு ஏற்பட்டால் அதை நம்பியுள்ள ஓட்டல், டீ கடைகள் பாதிக்கப்படும் என உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் குடிநீர் கேன், 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

திருவண்ணாமலையிலும் குடிநீர் கேன் விற்பனை பாதிப்பால், அதை நம்பியுள்ள தொழிலாளர்கள் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

தமிழகத்தில் எங்கு ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் எடுக்க வேண்டும் என, தமிழக அரசு விதிமுறை வகுத்து, அதற்கு கட்டணம் நிர்ணயித்தால் கூட அதனைத் தொடரத் தயாராக இருப்பதாக குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே