முன்னாள் அதிமுக எம்.பி. கே.சி.பழனிச்சாமி கைது

அதிமுக பெயரில் போலி இணையதளம் நடத்தி வந்தது உள்ளிட்ட புகாரின்பேரில் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி. பழனிச்சாமியை போலீசார் கைது செய்தனர்.

கோவையை சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவருமான கே.சி. பழனிச்சாமி மீது சூலூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

தான் அதிமுக-வில் இன்னும் இருப்பதாக கூறி, கே.சி. பழனிச்சாமி தொடர்ந்து கட்சியை விமர்சித்து வந்ததாகவும், கட்சியின் பெயரில் போலி இணைய தளம் நடத்தி வந்ததாகவும் சூலூர் காவல்நிலையத்தில் முத்து கவுண்டன் புதூர் ஊராட்சி மன்ற தலைவர் கந்தவேல் புகார் அளித்தார்.

இதன்பேரில் கோவையிலுள்ள கே.சி. பழனிச்சாமி வீட்டுக்கு சென்று அவரை அதிகாலையில் போலீஸார் கைது செய்து, சூலூர் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்திய தண்டனை சட்டத்தின்கீழ் ஏமாற்றுதல், நம்பியவர்களை ஏமாற்றுதல், ஆள்மாறாட்டம் செய்து ஏமாற்றுதல், தவறான ஆவணத்தை உருவாக்குதல், பொய் ஆவணம் உருவாக்கி ஏமாற்றுதல், ஏமாற்ற திட்டமிட்டு ஆவணம் உருவாக்குதல், சொத்து குறியீட்டை தவறாக பயன்படுத்துதல், தவறான சொத்து குறியீட்டை பயன்படுத்துதல், சொத்து அடையாளத்தை உருவாக்கும் கருவியை வைத்திருந்தல் உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழும், தகவல் தொழில் நுட்ப சட்ட பிரிவுகளின் கீழும் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே