சென்னையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டியை டாஸ் போட்டதுடன், பேட்டிங் செய்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இந்திய குடிமைப் பணி மற்றும் மத்திய பணி அலுவலர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இதில், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ரயில்வே, ஜிஎஸ்டி, வருமான வரித்துறை, வனத்துறை ஆகிய 6 கிரிக்கெட் அணிகள் மோதும் போட்டிகள் சென்னை மெரீனா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகின்றன.
இந்த போட்டித் தொடரை டாஸ் போட்டு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
அப்போது அமைச்சர் ஜெயக்குமார் முதலில் பந்துவீச, அதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேட்டிங் செய்து அசத்தியது அங்கிருந்த அதிகாரிகளை வெகுவாக கவர்ந்தது.
இதன் பிறகு ஐஏஎஸ், ஐபிஎஸ் அணிகள் மோதிய முதல் போட்டிக்கு முதலமைச்சர் டாஸ் போட்டார். டாஸில் வென்ற ஐஏஎஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இரு அணிகளின் கேப்டன்களுக்கும், வீரர்களுக்கும் முதலமைச்சர் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார்.
முன்னதாக போட்டியை தொடங்கி வைத்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விளையாட்டு என்பது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது என குறிப்பிட்டார்.
மேலும் விளையாட்டின் மூலம் உடல் ஆரோக்கியம் பெறுவதுடன், மன அழுத்தத்தை போக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.