குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னைப் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பல்கலைக்கழகத்துக்குள் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து சென்னை பல்கலைக்கழக மாணவர்கள் சேப்பாக்கத்தில் கடந்த இரு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மெரினா கடற்கரை சாலையில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற கார்த்திகேயன், சுப்பையா என்ற இரு மாணவர்களை போலீசார் கைது செய்ததாக குற்றச்சாட்டப்படுகிறது.
அவர்களை விடுவிக்கக்கோரியும், போராட்டத்தை ஒடுக்கும் செயலில் ஈடுபடுபடும் போலீசாரின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று மாலை முதல் போராட்டம் வலுக்கத் தொடங்கியது.
இதை தொடர்ந்து சென்னை பல்கலைக்கழகத்திற்கு 6 நாட்கள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரிக்கு விடுமுறை அறிவித்தாலும் உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என சென்னை பல்கலைக்கழக மாணவர் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இன்று மாலை சுமார் 7 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்திற்கு கூடுதலாக போலீஸ் படையினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அங்கு பதற்றமான சூழல்நிலவுகிறது. இதேபோல் மதுரை பல்கலைக்கழகத்திலும் மாணவர்களின் போராட்டம் வலுவடைந்துள்ளது.