81 வயது முதியவர்போல் வேடமிட்டு வெளிநாட்டுக்கு பயணிக்கவிருந்த இளைஞர்

டெல்லி விமான நிலையத்தில் இருந்து 81 வயது முதியவர் போல் வேடமிட்டு வெளிநாட்டிற்கு பயணிக்கு இருந்த 32 வயது நபர் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகளிடம் சிக்கி கொண்டார்.

டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்திற்கு வந்த முதியவர் ஒருவரை பயணிகளை சோதனையிடும் வழக்கமான நடைமுறையின்படி அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் வயதுக்கும் அவரது தோற்றத்திற்கும் பெருமளவு வேறுபாடு இருந்ததை கண்டு சந்தேகம் அடைந்துள்ளனர்.

முதியவராக தோன்றினாலும் அவரது நடவடிக்கைகளும் உருவமும் 81 வயது முதியவர் என்ற அளவிற்கு இல்லை. எனவே அவரை அழைத்துச் சென்ற அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் அந்த நபர் 32 வயது இளைஞர் என்பது தெரியவந்தது.

மேலும் அந்த நபர் குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்த ஜெயேஷ் படேல் என்பதும், அம்ரீட்சிங் என்ற முதியவர் பெயரில் போலி பாஸ்போர்ட் தயாரித்து நியூயார்க் செல்ல திட்டமிட்டது தெரியவந்தது.

முதியவர் போல் தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக வெள்ளை நிற டை அடித்துக் கொண்டு ஜீரோ பவர் மூக்கு கண்ணாடியையும் அணிந்து வந்த அந்த நபர், அதற்கும் ஒரு படி மேலே சென்று தள்ளாத முதியவர் போல் காட்டிக் கொள்வதற்காக வீழ்ச்சேரிலும் வந்துள்ளார்.

ஆனால் அத்தனை முயற்சிகளும் வெற்றிகரமாக அரங்கேறிய நிலையில் அதிகாரிகளின் சோதனையில் சிக்கி கொண்டார் அந்த நபர். இதையடுத்து அவர் ஆள்மாறாட்டம் செய்த குற்றச்சாட்டில் குடியேற்ற அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே