மருத்துவப்படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டதற்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

அரசாணையை இந்த ஆண்டே அமல்படுத்த கலந்தாய்வு தேதி அறிவித்து மாணவர்கள் சேர்க்கை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஸ்டாலின், அரசாணையில், ஆளுநரின் ஆணைப்படி என்று வெளியிட்டிருப்பது – வழக்கமான நிர்வாக நடைமுறையா அல்லது ஆளுநரிடம் அந்தக் கோப்பில் கையெழுத்து வாங்கப்பட்டுள்ளதா? என்றும் வினவியுள்ளார்.

மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. பிறகு அதை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தும், ஆளுநர் அதற்கு ஒப்புதல் தரவில்லை. 

இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், காலம் தாழ்த்தி வருவதால் ஆளுநரை கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் போராட்டங்களை நடத்தியது.

ஆளுநர் தரப்போ,அது தொடர்பாக முடிவெடுக்க 3 முதல் 4 வாரங்கள் ஆகும் என்று கூறியிருந்த நிலையில், இன்று மருத்துவ படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அளிக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்காத நிலையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத முன்னுரிமை இட ஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பித்திருப்பதற்கு திமுக தலைமை வரவேற்பு தெரிவித்துள்ளது.. திமுக தலைவர் ஸ்டாலின் இதுகுறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கை இதுதான்:

“தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் உரிய பயனடைய வேண்டும் என்னும் நோக்கில், திமுக பல தளங்களிலும் முன்னெடுத்த தொடர் போராட்டங்கள் மற்றும் அழுத்தம் காரணமாக, எடப்பாடி அதிமுக அரசு தற்போதாவது இறங்கிவந்து ‘நீட்’ தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத முன்னுரிமை இட ஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பித்திருப்பது வரவேற்கத்தக்கது.

தமிழக அரசிடம் இந்த அதிகாரம் இருக்கிறது என்றால் – ஏன் மசோதா நிறைவேற்றினார்கள், ஏன் ஆளுநருக்கு அனுப்பி – அனைத்துத் தரப்பிலும் பதற்றத்தை ஏற்படுத்த, இத்தனை மாதம் கிடப்பில் போட்டார்கள் என்பது தனி விவாதத்திற்குரியது; விளக்கம் தரப்பட வேண்டியது.

இவ்வளவு காலம் மாணவர்களையும், பெற்றோரையும் ஏக்கத்திற்கும் ஏமாற்றத்திற்கும் உள்ளாக்கியது ஏன் என்பது தனிக் கேள்வி என்றாலும், மேலும் தாமதிக்காமல் இந்த இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டே நடைமுறைப்படுத்திட, உடனடியாக கவுன்சிலிங் தேதிகளை அறிவித்து நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

ஒருமனதாகச் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா தமிழக ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது. திமுக சார்பில் கடிதம் எழுதி – போராட்டம் நடத்தி – மத்திய உள்துறை அமைச்சருக்குத் திமுக மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் எல்லாம் கடிதம் எழுதி கோரிக்கை வைத்தும், மத்திய பாஜக அரசோ – தமிழக ஆளுநரோ தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இந்த இட ஒதுக்கீடு குறித்து இதுவரை கிஞ்சித்தும் கவலை கொண்டதாகத் தெரியவில்லை; மசோதாவிற்கு ஒப்புதல் கொடுங்கள் என்று ஆளுநருக்கு உரியபடி அறிவுறுத்தவும் இல்லை!

இந்தச் சூழ்நிலையில் அதிமுக அரசும் – தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி – பாஜகவுடன் கூட்டணியாக உள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி ஆளுநரின் ஒப்புதலைப் பெறுவதற்குப் பதில் – இப்போது அரசாணை வெளியிட்டிருக்கிறது.

இதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு என்றால், இந்த உத்தரவை 45 நாட்களுக்கு முன்பே வெளியிட்டிருக்கலாம். இந்த அரசாணை சரியா தவறா – அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்றெல்லாம் பொது விவாதம் இப்போது தொடங்கிவிட்டது.

இதற்கிடையில் அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், ஆளுநரின் ஆணைப்படி (‘By order of Governor’) என்று வெளியிட்டிருப்பது – வழக்கமான நிர்வாக நடைமுறையா அல்லது ஆளுநரிடம் அந்தக் கோப்பில் கையெழுத்து வாங்கப்பட்டுள்ளதா? என்பதும் தெரியவில்லை. இதுகுறித்தெல்லாம் தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

இவை ஒருபுறமிருக்க, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை இந்த ஆண்டே அமல்படுத்தும் வகையில், உடனடியாக மருத்துவக் கவுன்சிலிங் தேதிகளை அறிவித்து – மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையைத் தொடங்கிட வேண்டும் என்றும், அரசாணை வழியாக வழங்கப்பட்டுள்ள இந்த இட ஒதுக்கீட்டிற்கு, எவ்வித இடையூறும் நேர்ந்து விடாமல் தடுக்க வேண்டிய மிக முக்கியக் கடமையை அதிமுக அரசு கண்ணும் கருத்துமாக – மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கை உணர்வுடனும் நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே