நடப்பாண்டே 50 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்… தமிழக அரசு மேல்முறையீடு!!

ஒபிசி இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அதில் நடப்பாண்டே 50 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.

ஓபிசி இடஒதுக்கீடு தொடர்பாக 3 பேர் கொண்ட குழு அமைக்க மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவ பட்டப்படிப்புகளில் 15 சதவீத இடங்களும், மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவீத இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக மத்திய தொகுப்புக்கு வழங்கப்படுகிறது.

இவ்வாறு மத்திய தொகுப்புக்கு வழங்கப்படும் இடங்களில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக்கோரி தமிழக அரசு, திமுக, அதிமுக, திராவிடர் கழகம், பாமக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசிக்கு 50 சதவீத இடஒதுக்கீடு தர மத்திய அரசு சட்டம் இயற்றலாம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 30 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட முடிவு என்பதால் தற்போதைய நிலை கருதி சட்டம் இயற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், ஒபிசி இடஒதுக்கீடு விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் கோர்ட்டில் இன்று மேல்முறையீடு செய்துள்ளது. அந்த மனுவில், நடப்பாண்டே 50 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Preethi

செய்தி தொகுப்பாளர்

Preethi has 289 posts and counting. See all posts by Preethi

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே