5 பெண்களை மணந்த பாலியல் கொடூரன்..! போக்சோவில் கைது

வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே 5 பெண்களை திருமணம் செய்த ஒருவன், தனது 3-வது மனைவியின் 5 வயது மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளான்.

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த காயிதேமில்லத் நகரை சேர்ந்தவர் 50 வயதான ஷான்பாஷா..! இவர் கிடைக்கின்ற வேலைகளை செய்து அந்த பகுதியில் சுற்றிவந்தார்.

அவ்வப்போது பெண்களை காதல் வலையில் விழவைத்து, அவர்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டு வாழ்க்கை கொடுப்பதாக கூறி இதுவரை 5 பெண்களை திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

3வது மனைவி வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்று விட்ட நிலையில், அவரது 5 வயது பெண் குழந்தை, ஷான்பாஷாவின் தங்கை வீட்டில் வளர்ந்து வந்தாள். அந்த சிறுமியை இரவு நேரத்தில் மட்டும் தன்னுடன் அந்த குழந்தையை படுக்க வைத்துக்கொள்வதாக கூறி ஷான்பாஷா அழைத்து சென்றுவிடுவது வழக்கம்.

இந்நிலையில் சம்பவத்தன்று இரவு நேரத்தில் குடிபோதையில் வீட்டிற்கு செல்லும் ஷான்பாஷா, தான் பெற்ற பிஞ்சு குழந்தை என்றும் பாராமல் பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கியுள்ளான். இதனால் காயமடைந்த அந்த சிறுமி காலையில் தனது அத்தை வீட்டிற்கு சென்றபோது வலியால் துடித்து அழுதுள்ளது.

இதனை அறிந்த அவரது உறவினர்கள் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் திருப்பத்தூர் நகர காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

இதையடுத்து ஷான்பாஷாவை பிடித்து விசாரித்த போது அவன், தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவனை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

5 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததோடு, பெண்களிடம் பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டு வந்த போதே கொடூரன் ஷான்பாஷாவுக்கு அவனது உறவினர்களும் காவல்துறையினரும் தக்கம் பாடம் புகட்டி இருந்தால் 5 வயது சிறுமிக்கு இது போன்ற கொடுமை அரங்கேறி இருக்காது என்கின்றனர் அப்பகுதி மக்கள்..!

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே