எகிப்தில் பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதி விபத்து – 32 பேர் பலி..!!

எகிப்தில் பயணிகள் ரயில் நேருக்குநேர் மோதிய விபத்தில் 32 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.

லக்சர் நகரத்திலிருந்து புறப்பட்ட ரயிலும் அலக்ஸ்ஸாண்டிரா என்ற இடத்திலிருந்து புறப்பட்ட ரயிலும் சோஹக் மாகாணத்தின் தஹ்தா என்ற நகரத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 32 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர் மேலும் 165 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்களை அழைத்துச் செல்ல 70 ஆம்புலன்ஸ் வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன .

ரயிலில் அவசர காலக்கட்டத்தில் பயன்படுத்தப்படும் பிரேக்கை மர்ம நபர்கள் இயக்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக ரயில்வே உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .

இந்த விபத்துக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு ஜனாதிபதி அப்துல் பத்தா அல் சிசி தெரிவித்துள்ளார்.

எகிப்து பிரதமர் முஸ்தபா மட்பொலி விபத்து நடந்த இடத்தை நேரில் சென்று பார்வையிட்டார். விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே