சென்னையில் கூவம் ஆற்றில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு

சென்னையில் கூவம் ஆற்றில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிரீம்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் சிலர் மக்கீஸ் தோட்டம் பகுதியில் ஆற்றங்கரையோரம் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது ஆற்றில் தவறி விழுந்த பிரதீப் சேற்றில் மாட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது. உடனே ரித்தீஷ்குமார் உள்பட மேலும் மூன்று சிறுவர்கள் பிரதீப்பை காப்பாற்ற முயன்றனர்.

ஆனால் காப்பாற்ற முயன்ற சிறுவர்களும் சேற்றில் சிக்கியதால், அப்பகுதியில் இருந்தவர்கள் சிறுவர்களைக் காப்பாற்ற முயன்றனர்.

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பொதுமக்கள் உதவியுடன் இரண்டு சிறுவர்களை மீட்டனர்.

ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட ரித்தீஷ்குமார் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். நீண்ட தேடுதலுக்கு பிறகு பிரதீப் சடலமாக மீட்கப்பட்டார்.

கூவம் ஆற்றில் மூழ்கி இருவர் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே