2 மாதத்தில் 18 போச்சு, மொட்டையடித்து எங்காவது ஓடிடலாம்னு நினைச்சேன்: ரீல் ஜெயலலிதா.

இரண்டு மாதங்களில் 18 விளம்பர படங்களை இழந்ததாகவும், அதனால் மனமுடைந்து மொட்டை அடித்து எங்காவது தலைமறைவாக விரும்பியதாகவும் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்டது குறித்து பிரபல நடிகை கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்திருந்தார். யார் வாரிசும் இல்லாததால் பாலிவுட்டின் முக்கிய ஆட்கள் சுஷாந்தை டார்கெட் செய்ததாக கங்கனா கூறினார். சுஷாந்த் சிறப்பாக நடித்து வெற்றிப் படங்களை கொடுத்தும் அவருக்கு எந்தவித அங்கீகாரமும் கிடைக்கவில்லை என்றார் கங்கனா.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கங்கனா ரனாவத் கூறியிருப்பதாவது,

சுஷாந்த் வழக்கில் இயக்குநர் மகேஷ் பட்டிடம் ஏன் போலீசார் இதுவரை விசாரணை நடத்தவில்லை. போலீசார் எனக்கு சம்மன் அனுப்பினார்கள். நான் மணாலியில் இருக்கிறேன். யாரையாவது அனுப்பி வைத்தால் வாக்குமூலம் தருகிறேன் என்றேன். ஆனால் அதன் பிறகு போலீசார் என்னை தொடர்பு கொள்ளவில்லை.

சுஷாந்த் சிங் ராஜ்புட் பற்றி நான் கூறியவை பொய் என்று நிரூபிக்கப்பட்டால் என் பத்மஸ்ரீ விருதை திருப்பிக் கொடுக்க தயாராக இருக்கிறேன்.

சுஷாந்த் மன அழுத்தத்தில் இருக்கிறார், அவர் பர்வீன் பாபி போன்று ஆகிவிடுவார் என்று மகேஷ் பட் ரியா சக்ரபர்த்தியிடம் கூறியிருக்கிறார். மகேஷ் ஏன் சுஷாந்தின் தந்தையை தொடர்பு கொண்டு உங்கள் மகனுக்கு மனநலம் சரியில்லை என்று கூறவில்லை?. ரியா எதற்காக மகேஷ் பட்டை அணுகினார்?. சுஷாந்த் விஷயத்தில் தலையிட மகேஷ் பட் யார்?. சுஷாந்த் வழக்கில் போலீசார் இதுவரை 30 பேரிடம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள். ஆனால் முக்கியமான அதிகாரம் படைத்தவர்களிடம் இன்னும் விசாரணை நடத்தவில்லை.
பாலிவுட்டின் பெரியாட்கள் என் கெரியர் முடிந்து நான் தற்கொலை செய்து கொள்வேன் என்றார்கள். அந்த கேங்கை நான் சூசைட் கேங் என்கிறேன்.

கடந்த 2016ம் ஆண்டு நான் நடித்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதன் பிறகு 18 பிராண்டுகளின் விளம்பர படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆனேன். ஆனால் என் மாஜி காதலர் என் மீது வழக்கு தொடர்ந்தார். என் மீது வழக்கு இருந்ததால் அத்தனை பிராண்டுகளின் விளம்பர படங்களும் என் கை நழுவிப் போனது. 2 மாதங்களில் 18 விளம்பர படங்களை இழந்தேன்.

அப்பொழுது எனக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் தலையை மொட்டையை அடித்துக் கொண்டு யாருக்கும் தெரியாமல் எங்காவது ஓடிவிட வேண்டும் போன்று இருந்தது. நான் செக்ஸுக்காக அழைவது போன்று கூறியதால் என் உறவினர்கள் அவர்களின் பிள்ளைகளை என்னை சந்திக்கவிடவில்லை.

பொது இடத்தில் என்னை மோசமாக விமர்சித்தார்கள். அதனால் இனி நான் திருமணம் செய்து கொள்வது கஷ்டம் தான். அவர்கள் சுஷாந்தை ரேபிஸ்ட் ஆக்கினார்கள். அவர் எப்படி பீகாருக்கு திரும்பிச் செல்ல முடியும்?. சிறு நகரங்களில் பணத்தை அல்ல மாறாக மரியாதையை தான் மதிப்பார்கள். சுஷாந்த் இறக்க வேண்டும் என்று விரும்பினார்கள் என நான் சொல்லவில்லை. ஆனால் அவர் வாழ்க்கை நாசமாகிவிட்டது. அதிகாரம் படைத்த அந்த 4 பேரை மும்பை போலீசார் ஏன் விசாரிக்கவில்லை?.
சுஷாந்தின் தற்கொலையை நான் கொலை என்கிறேன். அவரை தற்கொலை செய்ய தூண்டுதல் இருந்ததை நான் உணர்கிறேன். அதனால் அது கொலை தான். ஆரம்பத்தில் இருந்தே இதை கொலை என்று தான் நான் கூறி வருகிறேன் என்றார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே