சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கில் 15 பேர் குற்றவாளி என தீர்ப்பு!

சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில், 15 பேர் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஒருவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2018ல் அடுக்கு மாடிக் குடியிருப்பில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அங்கு பணிபுரிந்த 17 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் 2019 ஜனவரி 11ல் குண்டர் சட்ட நடவடிக்கை ரத்து செய்யப்பட்டது.

ஆனாலும் அவர்களுக்கு ஜாமின் கிடைக்கவில்லை.

17 பேருக்கு எதிரான வழக்கின் விசாரணை கடந்த ஆண்டு ஜனவரியில் மகளிர் நீதிமன்றத்தில் தொடங்கியது.

இதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 7 சாட்சிகளும், அரசுத் தரப்பில் 36 சாட்சிகளும் விசாரிக்கப்பட்டு 120 ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

11 மாதங்களாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணை கடந்த டிசம்பர் மாதம் நிறைவடைந்தது.

குற்றம்சாட்டப்பட்ட 17 பேரில் பாபு என்பவர் சிறையில் உயிரிழந்ததை அடுத்து 16 பேருக்கு எதிரான வழக்கில் போக்சோ நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா இன்று தீர்ப்பளித்தார்.

15 பேர் குற்றவாளி என்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

குற்றம்சாட்டப்பட்ட தோட்டக்காரர் குணசேகரன் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குற்றவாளிகளுக்கான தண்டனை விபரங்கள் சற்று நேரத்தில் அறிவிக்கப்பட உள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே