கடும் வன்முறைகளை அடுத்து 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளதாகவும் புதனன்று காலை முதல் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க போலீஸார் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் உயர் போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடத்தப்பட்டு வரும் போராட்டங்களில் வன்முறை நிகழ்ந்து வருகிறது.
நேற்று சீலாம்பூரில் 2 போலீஸ் பூத்களுக்கு தீவைக்கப்பட்டன. 2 போலீஸ் வாகனங்கள் எரிக்கப்பட்டன.
கிழக்கு டெல்லி பகுதியின் இணை கமிஷனர் அலோக் குமார் முன்னதாகக் கூறும்போது, 15 பாதுகாப்பு காவலர்கள் மற்றும் 6 பொதுமக்கள் உட்பட 21 பேர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பாக இரண்டு முதல் தகவலறிக்கைகள் பதிவு செய்யப்பட்டன. எதிர்ப்பு அமைதியாகவே நடந்தது; ஆனால் முடிவில் கலைந்து செல்லும் போது சிலர் கல்வீச்சில் ஈடுபட்டனர். லத்தி சார்ஜ் நடத்தப்படவில்லை, கூட்டத்தைக் கலைக்க கண்ணீர் புகை ஷெல்கள் வீசப்பட்டன என்றார்.
லத்திசார்ஜ் நடத்தப்படவில்லை என்று அலோக் குமார் கூறுகையில், சம்பவத்தைப் படம் பிடித்ததாக நம்பப்படும் சில வீடியோக்களில் போலீஸார் லத்தி சார்ஜ் நடத்துவதாகக் காட்டப்பட்டது.
ஞாயிறன்று நடந்த கலவரம் தொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர், இவர்கள் யாரும் மாணவர்கள் இல்லை.
இவர்கள் அனைவரும் குற்றப்பின்னணி உள்ளவர்கள், சிசிடிவி காட்சிகளை வைத்து இவர்களைக் கைது செய்துள்ளது போலீஸ்.
இந்நிலையில் சீலாம்பூர் பகுதியில் சட்டம் ஒழுங்கைப் பரமாரிக்க 144 தடை உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.