104 கிலோ தங்கம் மாயம்..; சிபிஐ அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப சிபிசிஐடி முடிவு..!!

சென்னையில் சிபிஐ வசமிருந்த 103.86 கிலோ தங்கம் மாயமானது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபி-சிஐடி காவல்துறை, திருட்டு வழக்குப் பதிவு செய்துள்ளது.

சிபிஐ கட்டுப்பாட்டிலிருந்த 103.86 கிலோ தங்கம் மாயமான சம்பவத்தில், அந்த தங்கத்தை பறிமுதல் செய்து, அது தொடர்பான வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த சிபி-சிஐடி முடிவு செய்துள்ளது.

சிபிஐ பதிவு செய்த வழக்கில் தனியாா் நிறுவனத்திடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 400 கிலோ தங்கத்தில் இருந்து 100 கிலோ மாயமானது குறித்து சிபிசிஐடி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று உயா்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், விசாரணையைத் தொடங்கிய சிபிசிஐடி, தங்கம் மாயமானது குறித்து திருட்டு வழக்குப் பதிவு செய்துள்ளது. 

தங்கத்தை இறக்குமதி செய்யும் தனியாா் நிறுவனம் சென்னை என்எஸ்சி போஸ் சாலையில் உள்ளது. இந்த நிறுவனத்துக்கு இந்திய தாதுக்கள் மற்றும் உலோக வா்த்தகக் கழகத்தின் அதிகாரிகள் சாதகமாக செயல்படுவதாக கூறி, சிபிஐ கடந்த 2012-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.

பின்னா் அந்த தனியாா் நிறுவனத்தில் சோதனை நடத்தி, 400.47 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்து தனியாா் நிறுவன அலுவலகத்தில் உள்ள பாதுகாப்புப் பெட்டகத்தில் வைத்து சிபிஐ அதிகாரிகள் சீல் வைத்தனா்.

இந்த பாதுகாப்புப் பெட்டகத்தின் 72 சாவிகளை சென்னையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனா்.

பின்னா், இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் கைவிட்டு, முடித்து வைத்தனா்.

ஆனால், இந்த தங்கத்தை இறக்குமதி செய்ய வெளிநாட்டு வா்த்தக கொள்கை விதிகள் மீறப்பட்டுள்ளன எனக்கூறி, அதற்கு அனுமதி வழங்கியதாக அதிகாரிகள் சிலா் மீது வழக்குப்பதிவு செய்தனா்.

அந்த வழக்கிலும் இந்த தங்கத்தை பறிமுதல் செய்ததாக கணக்குக்காட்டி, முறையாக சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு அனுமதி பெற்றனா்.

விசாரணையின் இறுதியில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம் வெளிநாட்டு வா்த்தகத்துறை இயக்குநா் ஜெனரலிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது.

இதுதொடா்பாக சிறப்பு நீதிமன்றத்திலும் உத்தரவு பெறப்பட்டது. இந்த தங்க இறக்குமதி நிறுவனம் பல வங்கிகளில் ரூ.1,160 கோடி கடன் பெற்று அதனை திரும்பச் செலுத்த முடியவில்லை.

இதனையடுத்து அந்த தனியாா் தங்க இறக்குமதி நிறுவனத்தின் சொத்துகளைக் கையகப்படுத்தி நிா்வகிக்க வங்கிகள் சாா்பில் சிறப்பு அதிகாரியாக ராமசுப்பிரமணியம் என்பவா் நியமிக்கப்பட்டாா்.

இந்த அதிகாரி இந்த தங்கத்தை கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். வங்கி சிறப்பு அதிகாரியிடம் தங்கத்தை ஒப்படைக்க சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தனியாா் அலுவலகத்தை 72 சாவிகளைப் பயன்படுத்தி திறந்து அந்த பாதுகாப்புப் பெட்டகத்தை திறந்த போது, 400.47 கிலோ தங்கத்தில், 103.864 கிலோ தங்கம் குறைவாக இருந்தது.

இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் சிறப்பு அதிகாரி ராமசுப்பிரமணியம் வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில், சிபிஐ அதிகாரிகள் தங்கத்தை தனியாா் நிறுவனத்தில் உள்ள தராசு மூலம் எடை போட்டனா்.

அதில் எடை அதிகமாக காட்டியிருக்கலாம். தற்போது வேறு தராசு மூலம் எடை பாா்க்கும்போது, வித்தியாசம் ஏற்பட்டிருக்கலாம் என வாதிடப்பட்டது. அதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி, மாயமாகி உள்ளது ஒரு சவரனோ 2 சவரனோ இல்லை.

சுமாா் 100 கிலோ தங்கம் . இதை சாதாரணமாக விட முடியாது. ஒருவேளை இந்த தங்கம் சிறப்பு நீதிமன்ற நீதிபதி கட்டுப்பாட்டில் மாயமாகி இருந்தால், நீதிபதி, நீதிமன்ற பணியாளா்கள் இடைநீக்கம் செய்யப்படுவதோடு அவா்கள் மீது திருட்டு வழக்குப்பதிவு செய்திருப்பாா்கள் என கருத்து தெரிவித்தாா்.

பின்னா் வழக்கை விசாரித்த நீதிபதி, தில்லி போலீஸ் சட்டத்தின் கீழ் செயல்படும் சிபிஐ அமைப்பின் மீது திருட்டு வழக்கு பதிவு செய்ய முடியாது.

எனவே, தங்கம் மாயமானது குறித்து வங்கிகளின் சிறப்பு அதிகாரி ராமசுப்பிரமணியம், சிபிசிஐடி போலீஸில் புகாா் அளிக்க வேண்டும்.

இந்த புகாா் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறைக் கண்காணிப்பாளா் பதவிக்கு குறையாத அதிகாரி புலன் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

இவரது புலன் விசாரணைக்கு, சிபிஐ அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

வழக்குப்பதிவு செய்த நாளில் இருந்து 6 மாதங்களுக்குள் புலன் விசாரணையை முடித்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை போலீஸாா் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டிருந்தனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே