வயதான பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு 6 மாதம் சிறை தண்டனை

வயதான பெற்றோரை பிள்ளைகள் கைவிட்டால் அவர்களுக்கு 6 மாதம் சிறைதண்டனை விதிக்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வரும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

பெற்று, வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை அவர்களது முதுமை காலத்தில் உடன்வைத்து பராமரிக்க வேண்டிய கடமை பிள்ளைகளுக்கு உண்டு. ஆனால் இந்தக் கடமையை பெரும்பாலானோர் செய்யத் தவறுவதால், மன உளைச்சலுக்கு ஆளாகும் பெற்றோர்கள் ஒரு கட்டத்தில் விபரீத முடிவுகளையும் எடுக்க நேரிடுகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்த பிரதமர் அலுவலகம், இவ்விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு சமூக நலம் மற்றும் அதிகார வழங்கல் துறை அமைச்சகத்துக்கு அறிவுறுத்தியது.

அதன் பேரில் அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அந்த அமைச்சகம், தற்போது நடைமுறையில் உள்ள பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலச்சட்டம்-2007ல் திருத்தம் கொண்டுவருவதற்கான சட்டவரைவை தயாரித்துள்ளது.

இந்த சட்டவரைவு , பிரதமர் அலுவலகத்தின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தின் படி வயதான பெற்றோரை உடன் வைத்து பராமரிக்காமல், பிள்ளைகள் கைவிட்டால் 3 மாதம் சிறைத்தண்டனை விதிக்க முடியும்.

இந்த தண்டனை காலத்தை 3 மாதத்தில் இருந்து 6 மாதமாக அதிகரிக்க, புதிய வரைவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் வயதான பெற்றோரை, மூத்த குடிமக்களை பாதுகாக்கிற கடமை யாருக்கெல்லாம் உண்டு என்பதற்கான உறவு வரம்பினை விரிவுபடுத்தவும் வகை செய்யப்பட்டுள்ளது.

தற்போது மகன்கள், மகள்கள், பேரக்குழந்தைகள் மட்டுமே சட்ட வரம்புக்குள் வரும் நிலையில், தத்து குழந்தைகள், மருமகன்கள், மருமகள்கள், பேரக்குழந்தைகள் ஆகியோரையும் வரம்புக்குள் கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய சட்டத்தின் படி, பெற்றோருக்கு பராமரிப்பு தொகையாக மாதம் 10 ஆயிரம் ரூபாய் வரை வழங்கலாம்.

இந்த வரம்பை நீக்கி விட்டு, பிள்ளைகள் நல்ல சம்பளம் பெற்றால் அதற்கேற்ற வகையில் பெற்றோருக்கு கூடுதல் தொகையை பராமரிப்பு செலவுக்காக தரவும் சட்டத் திருத்தத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே