லாலு பிரசாத்தின் மனைவி,மகள் கொடுமைப்படுத்துவதாக மருமகள் போலீசில் புகார்

பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மனைவி மற்றும் மகள் உணவு கொடுக்காமல் கொடுமைப்படுத்துவதாக அவரது மருமகள் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆர்ஜேடி கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப்புக்கும் அக்கட்சி எம்எல்ஏவின் மகள் ஐஸ்வர்யா ராயுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த அடுத்த ஆறுமாதத்திலேயே விவகாரத்து கோரி தேஜ் பிரதாப், நீதிமன்றத்தை நாடினார்.

இந்த நிலையில் பாட்னாவில் உள்ள லாலு பிரசாத் வீட்டுக்கு முன் பெற்றோருடன் தர்ணாவில் ஈடுபட்டுள்ள தேஜ் பிரதாப்பின் மனைவி ஐஸ்வர்யா ராய், லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி மற்றும் மகள் மிசா பாரதி மீது சரமாரியாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

தனது கணவருடன் சேர்ந்து வாழவேண்டும் என்ற நோக்கத்தில் மாமியார் வீட்டில் இருந்து வரும் தனக்கு உணவு கொடுக்காமலும், சமையலறைக்குள் நுழைய விடாமலும் கொடுமை செய்வதாக ஜஸ்வர்யா ராய் தெரிவித்துள்ளார்.

மேலும் தேஜ் பிரதாப்பின் சகோதரியும் மாநிலங்களவை உறுப்பினருமான மிசா பாரதி, தனது கணவருடன் சேர விடாமல் தடுப்பதாகவும், இதற்கு மாமியார் ராப் தேவியும் உடந்தை என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே