ரூ.1 கோடிக்கான காசோலையை ஆர்.கே. செல்வமணியிடம் அளித்தார் முதல்வர்

காஞ்சிபுரம் மாவட்டம், பையனூரில் உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் அருகில் “புரட்சித் தலைவி அம்மா படப்பிடிப்பு தளம்” அமைப்பதற்கு தமிழக அரசின் சார்பில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே. செல்வமணியிடம் 1 கோடி ரூபாய்க்கான காசோலையை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.

பையனூரில் கடந்த ஆண்டு நடைபெற்ற திரைப்பட கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களால் உருவாக்கப்பட்ட எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் திறப்பு விழாவில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் அருகில் அரங்கம் கட்டித்தருமாறு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

இக்கோரிக்கையை ஏற்று, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பெயரில் அரங்கம் அமைப்பதற்கு தமிழக அரசின் சார்பில் 5 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார்.

அதன்படி,  அறிவிக்கப்பட்ட நிதியில் முதல் கட்டமாக  1 கோடி ரூபாய்க்கான காசோலையை ஆர்.கே. செல்வமணியிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தலைமைச் செயலாளர் க. சண்முகம்,  தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர்.வி. உதயகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே