மரங்களில் தேவையற்ற பொருட்கள் பொருத்துவோருக்கு ரூ.25,000 அபராதம், 3 ஆண்டு சிறை

விளம்பரத் தட்டிகள், கம்பிகள், கேபிள் ஒயர்கள் போன்றவற்றை மரங்களில் பொருத்தினால் 25 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும், 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படுமென சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் எச்சரித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பசுமை பரப்பளவை அதிகரிக்கும் வகையில் பிரதான சாலைகள் மற்றும் உட்புறத் தெருக்களில் பல்வேறு மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

மரங்கள் அனைத்தும் நல்ல முறையில் வளர வளமான மண், தண்ணீர், சூரிய ஒளி ஆகியவை முக்கியமாக உள்ள நிலையில், இயற்கைக்கு மாறாக மரங்களில் எவ்வித சேதாரமும் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டியது பொதுமக்களின் கடமை எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், சில தனியார்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் தங்கள் நிறுவன விளம்பரங்களை அட்டை மற்றும் பலகைகள் போன்ற தேவையற்ற பொருட்களின் மூலம் மரங்களில் ஆணி அடித்து அல்லது கயிற்றால் கட்டி விளம்பரம் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மரங்களில் வண்ணம் பூசுவதுடன், மின்சார அலங்கார விளக்குகள் அமைத்தல், கம்பிகள், கேபிள் ஒயர்கள், மற்றும் இதர பொருட்களை அமைத்துள்ளதாகவும், இதுபோன்ற நடவடிக்கைகளால், மரங்கள் பட்டுப்போவதுடன் அதன் வாழ்நாள் குறைந்து போகும் என்றும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

எனவே மரங்களில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற பொருட்களை சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் 10 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

தவறும்பட்சத்தில், சம்மந்தப்பட்டவர்கள் மீது சென்னை மாநகராட்சி முனிசிபில் சட்டம் 1919 ஆம் ஆண்டு 326 – ஐ விதியின்படி, 25 ஆயிரம் ரூபாய் வரை அதிகபட்ச
அபராதம் மற்றும் மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த புகார்களை 1913 என்ற இலவச தொலைபேசி எண் வாயிலாக பொதுமக்கள் தெரிவிக்குமாறு மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் வலியுறுத்தியுள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே