போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கான அபாரதத்தை மாநில அரசுகள் குறைப்பதால் பிரச்சனை இல்லை

மத்திய அரசின் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத் தொகையை மாநிலங்கள் குறைப்பதால் எந்தப் பிரச்சினையும் இல்லை என மத்திய அமைச்சர் நிதின்கட்காரி தெரிவித்துள்ளார். 

மத்திய அரசின் புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி போக்குவரத்து விதிமீறல்களுக்கு அதிகபட்ச அபராதமும், தண்டனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மத்திய அரசு விதித்த அபராதத் தொகைகளை குறைத்து நேற்று குஜராத் அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு சட்டப்படி ஹெல்மெட் மற்றும் சீட்பெல்ட் அணியாமல் செல்பவர்களுக்கு 1000 ரூபாய் அபராதம் என்ற நிலையில் அதனை 500 ரூபாயாக குறைத்துள்ளது. ஓட்டுநர் உரிமம் இல்லாமைக்கு 5000 ரூபாய்க்கு பதில் 2000 முதல் 3000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

இரு சக்கர வாகனத்தில் 3 பேர் பயணிப்பதற்கான அபராதம் 1000 ரூபாயில் இருந்து 100 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. காற்று மாசுபாடு ஏற்படுத்தும் வாகனங்களுக்கு அபராதம் 10 ஆயிரம் ரூபாய்க்கு பதில் 1000 முதல் 3000 ஆயிரம் ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஹோண்டா ஆக்டிவா 125 பி.எஸ். 4 அறிமுகவிழாவில் கலந்துகொண்டு பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி அபராதத் தொகையை மாநிலங்கள் குறைப்பதால் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றார்.

விபத்துக்களையும் உயிரிழப்புகளையும் தடுப்பதற்காகவே புதிய மோட்டார் வாகனச் சட்டம் கொண்டுவரப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் மாநிலங்கள் தங்கள் மாநில சூழலுக்கேற்ப செயல்படலாம் என்றும் அவர் கூறினார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே