பயன்டுத்தும் தண்ணீரின் அளவிற்கு ஏற்ப கட்டணம் – விரைவில்

வணிக நிறுவனங்களிலும் தனியார் கட்டிடங்களிலும் தண்ணீர் குழாய்களில் டிஜிட்டல் மீட்டர் பொருத்தி பயன்டுத்தும் தண்ணீரின் அளவிற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்க சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியம் திட்டமிட்டுள்ளது.

சுமார் ஒருகோடி மக்கள் தொகையும் ,12 லட்சம் கட்டிடங்களும் உள்ள சென்னை மாநகருக்கு நாளொன்றுக்கு 550 மில்லியன் லிட்டர் தண்ணீர் குடிநீர் வழங்கல் வாரியத்தால் வினியோகிக்கப்படுகின்றது.

கோடைக்காலத்திற்கு முன்பு வரை 800 மில்லியன் லிட்டர் தண்ணீர் வினியோகிக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 250 மில்லியன் லிட்டர் குறைவாக தற்போது வினியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதை மக்களிடையே ஊக்குவிக்கவும், குடிநீர் வழங்கல் வாரியத்தின் வருவாயை உயர்த்தவும் வணிக நிறுவனங்களிலும், தனியார் கட்டிடங்களிலும், குடியிருப்புகளிலும் தண்ணீர் குழாய்களில் டிஜிட்டல் மீட்டர் பொருத்தி பயன்டுத்தும் தண்ணீரின் அளவிற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்க சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் வாரியம் திட்டமிட்டுள்ளது .

வணிக நிறுவனங்கள், பகுதி நேர வணிக கட்டிடங்களிலும், அடுக்குமாடி குடியிருப்புகளிலும் குடிநீர் வழங்கல் வாரியத்தால் மீட்டர் பொருத்தப்பட்டு ஆண்டுக்கு 2 முறை தண்ணீருக்கான கட்டணம் வசூலிக்கும் நடைமுறை தற்போது உள்ளது.

மற்ற குடியிருப்புகளை பொறுத்தவரையில், வாரியத்தால் நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச கட்டணம் மட்டுமே ஆறு மாத்திற்கு ஒருமுறை வசூலிக்கப்படுகிறது.

தற்போது நடைமுறையில் உள்ள மீட்டர்களில் தண்ணீரை கணக்கிடுவதில் தவறுகளும், குளறுபடிகளும் இருந்து வருகிறது. இதனால் பயண்படுத்திய தண்ணீரை சரியாக கணக்கிட முடியாததால் குறைந்த அளவு கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

இதேபோல அடுக்குமாடு வீடுகள், பங்களாக்கள், போன்றவற்றிலும் குடிநீர் பயன்படுத்துவதை அளவிட முடியாமல் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த அளவு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

நடப்பாண்டை பொறுத்த வரையில், குடியிருப்புகளுக்கு குறைந்தபட்ச கட்டணமாக மாதமொன்றுக்கு 80ரூபாயும், 500 கிலோ லிட்டர் வரை பயன்படுத்தும் வணிக கட்டிடங்களும் 1540 ரூபாய் வரையிலும் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது.

இந்நிலையில், கட்டிடங்களில் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் குடிநீர் இணைப்புகள் மட்டுமின்றி வீடுகளுக்கும் அவர்கள் பயன்படுத்தும் குடிநீருக்கு ஏற்றாற்போல் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை அமல்படுத்த சென்னை குடிநீர் வாரியம் சமீபத்தில் திட்டமிட்டுள்ளது.

மேலும் ஆறு மாதத்திற்கு ஒருமுறை கட்டணம் வசூலிக்கும் முறையை மாற்றி மாதம் ஒருமுறை வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்டமாக டிஜிட்டல் மீட்டர் பொருத்தி கட்டணம் வசூலிக்கும் முறையை வணிக கட்டிடங்களில் நடைமுறைக்கு கொண்டு வந்த பின்னர் படிப்படியாக அனைத்து வீடுகளுக்கும் இத்திட்டத்தை செயல்படுத்த வாரியம் முடிவு செய்துள்ளது.

நவீன டிஜிட்டல் மீட்டர் பொருத்தப்படுவதன் மூலம் வீடுகளில் தண்ணீர் பயன்படுத்தும் அளவிற்கு கட்டணத்தை வசூலிக்க முடியும் என்றும் எந்த அளவுக்கு குடிநீரை பயன்படுத்துகிறார்களோ அதற்கேற்ப உரிய கட்டணத்தை வசூல் செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ள குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகள், இதன் மூலம் குடிநீர் வாரியத்துக்கு வருவாய் அதிகரிப்பதோடு தண்ணீரும் சிக்கனமாக செலவிடப்படும் என்றும் கூறுகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே