பணமில்லா அபராத பரிவர்த்தனைக்காக விருது பெற்றுள்ளதாக காவல் ஆணையர் பெருமிதம்

போக்குவரத்து விதிமீறல்களுக்கு மின்னணு முறையில் அபராதம் வசூலிக்கும் முறையை அமல்படுத்தியதற்காக, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் சென்னை காவல்துறைக்கு விருது வழங்கப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் காவல்துறையினரை கௌரவிக்கும் வகையில், முதலமைச்சரின் காவலர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

அதில் கடந்த 10 ஆண்டுகளில் எவ்வித களங்கமும் இல்லாமல் சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து, குற்றப்பிரிவு உள்ளிட்ட 15 துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 644 காவலர்களுக்கு, சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் விருதுகளை வழங்கினார்.

முன்னதாக ஆயுதப்படை காவலர்களின் அணிவகுப்பு மரியாதையையும் அவர் ஏற்றுக்கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், காவலர்களின் சிறப்பான பணியின் காரணமாகவே பொதுமக்களின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

மேலும் சென்னை முழுவதும் சி.சி.டி.வி கேமராக்களை பொருத்தியதற்காகவும், போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதமாக ரொக்கமில்லா பரிவர்த்தனையை அமல்படுத்தியதற்காகவும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் சென்னை காவல்துறைக்கு 2 விருதுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்தார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே