திருச்சியில் தாயை கழுத்தை நெரித்து கொலை செய்த மகன்

திருச்சியில் மது அருந்த பணம் கொடுக்காததால் தாயை கழுத்தை நெரித்து கொலை செய்த மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

ராம்ஜி நகர் மில் காலனி பகுதியில் வசித்து வந்தவர் சாந்தி. இவருடைய மகன் குமரவேல் மனைவியுடன் வீட்டின் மேல் தளத்தில் வசித்து வருகிறார்.

பொறியியல் பட்டதாரியான இவர் தனியார் டைல்ஸ் கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். குடிபோதைக்கு அடிமையான குமரவேல் மனைவியின் நகைகளை அடகு வைத்து குடித்து தீர்த்ததோடு, குடும்பத்தினரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்றிரவு தாய் சாந்தியிடம் மது அருந்த குமரவேல் பணம் கேட்டுள்ளார். அவர் பணம் கொடுக்க மறுக்கவே இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் நீண்ட நேரம் நீடித்துள்ளது.

இதனால் கோபம் அடைந்த குமரவேல் தாய் என்றும் பாராமல் நள்ளிரவில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சாந்தியின் கழுத்தை நெரித்தும் தலையணையால் முகத்தை அழுத்தியும் கொலை செய்துள்ளார்.

தலைமறைவாக உள்ள குமரவேலை எடமலைப்பட்டி புதூர் போலீசார் தேடி வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே