உத்தரப் பிரதேசத்தில் 17 வயது மகளின் தலையை தந்தையே வெட்டி காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் ஹர்டோய் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
சர்வீஷ் குமார் எனும் நபர், தனது மகளுக்கும் மற்றொரு நபருக்கும் இடையே இருந்த தொடர்பின் காரணமாகவே மகளின் தலையை வெட்டியெடுத்துள்ளார்.
கூர்மையான ஆயுதத்தால் மகளின் கழுத்தை அறுத்து தலையை தனியாக எடுத்து காவல் நிலையம் நோக்கி நடக்கத் தொடங்கியதையடுத்து காவல்துறையினர் வழியிலேயே அவரை தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர்.
இது குறித்த விசாரணையில், சர்வீஷ் குமார் இந்த தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், தலையில்லாத மகளின் சடலம் வீட்டினுள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தில் மகளின் தலையை கைப்பற்றும்போது முறையாக செயல்படாத காவல்துறை அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.
தேசிய அளவில் கடந்த 2019ல் உத்தரப் பிரதேசத்தில்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் பதிவாகியுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றது.
மேலும், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் இம்மாநிலத்தில்தான் அதிக அளவில் பதிவாகியுள்ளதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2019ல் மட்டும் 7,444 போக்ஸோ குற்றங்கள் மாநிலத்தில் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.