தமிழக முதலமைச்சர் பழனிசாமி – கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் சந்திப்பு

இருமாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் விவகாரங்கள் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனுடன், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திருவனந்தபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

தமிழகம் – கேரளா இடையிலான நதி நீர் பிரச்சனைகளை பேசி தீர்க்க இருதரப்பிலும் முடிவு செய்யப்பட்டது. அதற்கான பேச்சுவார்த்தையில் பங்கேற்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு காலை புறப்பட்டுச் சென்றார்.

அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பரம்பிகுளம்-ஆழியாறு உள்ளிட்ட நதிநீர் விவகாரங்கள் குறித்து பினராயி விஜயனுடன் பேச இருப்பதாகவும், இதில் நல்ல முடிவு கிடைக்கும் என நம்புவதாகவும் கூறினார்.

திருவனந்தபுரம் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை அவர் தங்கியிருந்த இடத்திற்கு சென்று கேரள முதல்வர் பினராயி விஜயன் நேரில் சந்தித்தார். அப்போது மலர் கொத்தும், சால்வையும் போர்த்தி வரவேற்றார்.

அதனைத்தொடர்ந்து இருதரப்பிலான பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது.

தமிழக அரசு தரப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், தலைமை செயலாளர் சண்முகம், முதலமைச்சரின் செயலாளர் சாய்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

கேரளா மாநில அரசு சார்பில் முதலமைச்சர் பினராயி விஜயன், நீர்வளத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி, மின்சாரத்துறை அமைச்சர் மணி, வனத்துறை அமைச்சர் ராஜு ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

  • முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை அதிகரிக்கும் விவகாரம்,
  • பரம்பிகுளம் – ஆழியாறு மற்றும் பாண்டியாறு – புன்னம்புழா ஆறுகளில் தண்ணீர் விடுவது,
  • புதிய நீர்மின் திட்டங்கள் உருவாக்குவது,
  • கேரளாவில் கடலில் கலக்கும் உபரி நதி நீரை தமிழகத்திற்கு திருப்புவது உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

2004 ஆம் ஆண்டு தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, அப்போதைய கேரளா முதல்வர் உமன்சாண்டியை சென்னையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்த நிலையில், மீண்டும் இரு மாநில முதலமைச்சர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே