டிக்கெட் எடுக்க சொன்ன நடத்துநர்… தாக்குதலில் ஈடுப்பட்ட காவலர்கள்..!

நெல்லை அருகே அரசு பேருந்தில் பயணித்த ஆயுதப்படை காவலர்கள் இருவர் பயணசீட்டு எடுக்க கூறிய நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் குமுளியில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற அரசு பேருந்தில் ஆயுதப்படை காவலர்கள் தமிழரசன் மற்றும் மகேஷ் ஆகியோர் ஏறி உள்ளனர். பேருந்து நடத்துனர் ரமேஷ் அவர்கள் இருவரையும் பயணச் சீட்டை பெற்றுக் கொள்ளுமாறு கூறி உள்ளார்.

ஆனால் பயணச்சீட்டு இன்றி பயணிக்கும் வகையில் தங்களிடம் வாரண்ட் இருப்பதாக கூறிய காவலர்கள் இருவரும் பயணச்சீட்டு எடுக்க மறுத்துள்ளனர்.

இதையடுத்து பேருந்து சிறிது தூரம் சென்ற நிலையில், வாரண்ட்டை காண்பிக்குமாறு நடத்துனர் ரமேஷ் காவலர்களிடம் கேட்டுள்ளார். ஆனால் வாரண்ட்டை காட்ட மறுத்த காவலர்கள் இருவரும் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. அப்போது நடத்துனர் ரமேஷை, காவலர் கன்னத்தில் அறைந்துள்ளார்.

தொடர்ந்து நடத்துனரை காவலர்கள் இருவரும் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் நடத்துனருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டு ரத்தம் வர துவங்கியுள்ளது.

ரத்தம் வழிய, நடத்துனர் தான் தாக்கப்பட்டது குறித்து பேசும் வீடியோவும் வெளியாகியுள்ளது.

இதையடுத்து அருகில் இருந்த மூன்றடைப்பு காவல் நிலையத்திற்கு பேருந்துடன் சென்ற நடத்துனர், தன்னைத் தாக்கிய காவலர்கள் இருவர் மீதும் புகார் அளித்தார்.

பின்னர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நடத்துனர் அளித்த புகாரின் பேரில் ஆயுதப்படை காவலர்கள் இருவரையும் மூன்றடைப்பு போலீசார் கைது செய்தனர்.

பின்னர், காவலர்கள் இருவரும் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

பயணச்சீட்டு எடுக்குமாறு கூறிய அரசு பேருந்து நடத்துனரை ஆயுதப்படை காவலர்கள் இருவர் தாக்கிய சம்பவம் போக்குவரத்து ஊழியர்கள் இடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே