சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் வழக்கம் போல் மின்சார ரயில் சேவை

சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் பராமரிப்பு பணிகளுக்காக இன்று மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த வழித்தடத்தில் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை கடற்கரை – தாம்பரம் மற்றும் கடற்கரை – வேளச்சேரி ஆகிய வழித்தடங்களில் செப்டம்பர் 22ம் தேதி பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதாகவும், எனவே அன்றைய தினம் இரு வழித்தடங்களிலும் மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படும் எனவும் தென்னக ரயில்வே கடந்த வாரம் அறிவித்திருந்தது.

இந்நிலையில் 22ம் தேதியான இன்று கடற்கரை – வேளச்சேரி வழித்தடத்தில் மட்டுமே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் அந்த வழித்தடத்தில் மட்டுமே மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வழித்தடத்தில் மின்சார ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்படும் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே