கொரோனாவால் செங்கல்பட்டு தலைமை மருத்துவர் மரணம் : குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி முதல்வர் அறிவிப்பு!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த தலைமை மருத்துவர் சுகுமாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அரசு தாலுக்கா மருத்துவமனையில் மருத்துவ அலுவலராக பணியாற்றி வந்த மருத்துவர் எஸ். சுகுமாரன் அவர்கள் வைரஸ் நோய் தொற்றுக்கு உள்ளாகி தனியார் மருத்துவமனையில் 26/6/2020 முதல் 30/6/2920 வரை சிகிச்சை பெற்று வந்தார் எனவும் இவருக்கு ஏற்கனவே நீரிழிவு நோய் மற்றும் ரத்த கொதிப்பு நோய் இருந்ததாகவும் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டதால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் 30/6/2020 அன்று இரவு 8: 45 மணிக்கு சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார் எனவும் சிகிச்சை பலனின்றி 3/7 /2020 அன்று காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

சுகுமாரன் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். சுகுமாரன் அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். இந்தப் பேரிடர் நோய் தொற்று காலத்தில் கடமை தவறாமல் கண்ணியத்துடன் பணியாற்றிய சுகுமாரன் அவர்களின் குடும்பத்திற்கு அரசு அறிவித்தபடி நிவாரணம் வழங்கவும், அன்னாரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு பணி வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே