ஒரு மரத்திற்கு ரூ.42 என பெறாமல் ஜக்கி வாசுதேவ் மரம் நடவேண்டும் – அன்புமணி

ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் ஒரு மரத்திற்கு 42 ரூபாய் என பணம் பெறாமல் தமிழகம் முழுவதும் மரம் நட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரியில் பருவநிலை மாறுதல்கள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கில் கலந்துகொண்டு மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் உரையாற்றினார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஈஷா மையத்தின் சார்பில் தற்போது ஜக்கிவாசுதேவ் ஒரு மரத்திற்கு 42 ரூபாய் என பணம் பெற்றுக் கொண்டு காவிரிப் படுகையில் மரம் நடும் பணியை மேற்கொண்டுள்ளார் என்றும், இதை பணம் வாங்காமல் தமிழகம் முழுவதும் அவர் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய எம்.பி. அன்புமணி ராமதாஸ், போக்குவரத்து நெரிசலால் வெளிப்படும் கரியமிலவாயு தான் புவி வெப்பமயமாதலுக்கு மிக முக்கிய காரணம் என்றும், அரசு சார்பில் இயக்கப்படும் பொது போக்குவரத்தை அனைவரும் பயன்படுத்தினால் மாசு ஏற்படுவதை தடுக்கமுடியும் என்றும் அறிவுறுத்தினார்.

பொதுமக்கள் அனைவரும் மின்சாரத்தில் இயங்கும் வாகனத்தை பயன்படுத்த முன்வரவேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே