உச்சநீதிமன்றத்திற்கு நிரந்தரமான 5 நீதிபதிகள் அமர்வு நியமனம்

உச்சநீதிமன்றத்திற்கு 5 நீதிபதிகள் அடங்கிய நிரந்தர அரசியல் சாசன அமர்வு நியமனம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 70 ஆண்டுகளில் நிரந்தரமான அரசியல் சாசன அமர்வு நியமனம் செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். அக்டோபர் ஒன்றாம் தேதியில் இருந்து இந்த புதிய அமர்வு வழக்குகளை விசாரணை செய்யும்.

தற்போது உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆகும். சுமார் 60 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 37 முக்கிய வழக்குகள் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளன.

உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளாக நான்கு புதிய நீதிபதிகள் வரும் திங்கட்கிழமை பதவியேற்க உள்ளனர். இதனால் உச்சநீதிமன்றத்திற்கு முழு பலம் கிடைக்கும்.

நிரந்தரமான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுடன் 3 நீதிபதிகள் கொண்ட 5 அமர்வுகள் செயல்படும்.

20 முதல் 25 நீதிபதிகள் வரை முக்கிய அரசியல் சட்டம் தொடர்பான முக்கிய வழக்குகளை விசாரிக்கும் நிலையில் ஏழு நீதிபதிகள் கொண்ட இரண்டு அமர்வுகளும் இயங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே