இராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 3வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம்

ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3 ஆவது நாளாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை அரசால் அரசுடைமையாக்கப்பட்ட சுமார் 150க்கும் மேற்பட்ட விசைப் படகுகளுக்கு உரிய நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இராமேஸ்வரத்தில் உள்ள விசைப்படகு மீனவர்கள் கடந்த 24ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

போராட்டத்தின் மூன்றாவது நாளான இன்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனால் சுமார் 900க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. சுமார் 50 ஆயிரம் மீன்பிடி தொழிலாளர்களும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மீன்பிடி தொழிலாளர்களும் வேலை இழந்திருக்கிறார்கள். தங்களது கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கவில்லை என்றால் வரும் 29ஆம் தேதி ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரையிலுள்ள அனைத்து பகுதி மீனவர்களையும் ஒன்று திரட்டி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என மீனவ சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே