கேரள மாநிலம் இடுக்கி நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும் நிலச்சரிவில் சிக்கி காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இடுக்கி மாவட்டம் மூணாறு ராஜமலை பகுதியில் கனமழை காரணமாக நேற்று இரவு நிலச்சரிவு ஏற்பட்டது. வீடுகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து இடுக்கி ராஜமலை பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் 80-க்கும் மேற்பட்டோர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகின.
மேலும், இன்று காலை மண்சரிவில் சிக்கிய 5 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும்,10 பேர் இடிபாடுகளிலிருந்து காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.
இதனை தொடர்ந்து, தோட்டத் தொழிலாளர்கள் சுமார் 80 பேர் மாயமானதாக தகவல் வெளியகியுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி இருப்போர் பெரும்பாலும் தமிழகத்திலிருந்து தேயிலைத் தோட்டப் பணிக்குச் சென்றவர்கள் என்றும், அவர்களைத் தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.