அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள்

அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 2 ஆயிரத்து 449 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு பள்ளிகளே தற்காலிக ஆசிரியர்களை நேரடியாக நியமிக்க பள்ளிக்கல்வி துறை அனுமதி அளித்துள்ளது.

அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் தமிழ் ஆங்கிலம் கணிதம் உயிரியல் வேதியியல் தாவரவியல் விலங்கியல் பொருளியல் இயற்பியல் போன்ற முக்கிய பாடங்களில் 2449 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் இருக்க பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் அந்தந்த பள்ளிகளுக்கு அருகில் உள்ள தகுதியான பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்து தற்காலிகமாக நியமித்துக் கொள்ள அரசு பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை ஐந்து மாதங்களுக்கு மட்டும் 2449 தற்காலிக முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை மாதம் 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் பள்ளிகளே நேரடியாக நியமித்துக்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 5 மாதங்களுக்கு தேர்வு செய்யப்படும் 2449 ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் வழங்க 12 கோடியே 24 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே