மெதுவாக செல்லுமாறு அறிவுரை கூறிய நபருக்கு சரமாரி அடி உதை

வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற அவரை தட்டிக் கேட்ட நபர் குடும்பத்துடன் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடி நியூடவுன் பகுதி மில்லத் நகரில் வசித்து வருபவர் சித்தீக், கூலித் தொழிலாளியான இவர் மனைவியுடன் கடை வீதிக்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சதாம் என்பவர் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்துள்ளார். அவரிடம் குழந்தைகள் இருக்கும் பகுதியில் மெதுவாக வாகனத்தை ஓட்டுமாறு சித்தீக்கின் மனைவி வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த சதாம் சித்தீக்கின் மனைவியை தாக்கியதாகவும், இதற்கு பதிலடியாக கணவர் சித்தீக், சதாமை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. மேலும் சதாம் மற்றும் அவருடைய நண்பர்கள் கும்பலாக சித்தீக்கின் வீட்டிற்கு சென்று அவரது மனைவி மற்றும் குழந்தைகளை தாக்கிய பின் வீட்டு உபயோக பொருட்களையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர்.

படுகாயமடைந்த சித்தீக் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு சென்று மருத்துவர்கள் முன்னிலையிலும் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மருத்துவமனையில் ரகளையில் ஈடுபட்ட அபு, பரசுராமன், ரஹீம் உட்பட 6 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே