ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பைகளின் உற்பத்தியை நிறுத்த அக்டோபர் 2ம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

மகாத்மா காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் 2ம் தேதி முதல் நாடு முழுவதும் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கை தடை செய்ய உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது.

மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அனுப்பியுள்ள கடிதத்தில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், பைகள் உற்பத்தியை நிறுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

அக்டோபர் 2ம் தேதிக்குள் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

அரசு அலுவலகங்கள், பொதுத்துறை தனியார் நிறுவனங்கள், பிளாஸ்டிக் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

செயற்கையான பூக்கள், பேனர்கள், கொடிகள், பூந்தொட்டிகள் , பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்கள், பிளாஸ்டிக் எழுதுபொருட்கள் , பிளாஸ்டிக் கோப்பைகள், ஸ்பூன்கள், பழரசம் அருந்தும் ஸ்ட்ரா, அலங்காரப் பொருட்கள் உள்பட எந்த வகையான பிளாஸ்டிக் பயன்பாட்டும் இருக்கக்கூடாது என்றும் அதற்கு மாற்று முறைகளை நாடுமாறும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே