நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு இன்று 92வது பிறந்த நாள்! உணர்வுப்பூர்வமான நடிப்பால் சிகரம் தொட்ட, நடிப்புலக மேதையைப் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு.
தமது முதல் படமான பராசக்தியிலேயே முத்திரை பதித்தவர் சிவாஜி கணேசன். அவரது குரலில் கலைஞரின் வசனங்கள் தமிழகத்தின் பட்டிதொட்டியெங்கும் எதிரொலித்தன.
சிவாஜியின் நடிப்பில் வெளிவந்த ஒவ்வொரு படமும் அவரது நடிப்புத் திறனை மென்மேலும் மெருகேற்றிக் காட்டின.
புராண பாத்திரங்களோ, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களோ எதையும் ஏற்று நடிப்பதில் தன்னிகரற்று விளங்கியவர் சிவாஜி.
திருமால், சிவபெருமாள், அப்பர், நாரதர், வீரபாகு, கர்ணன் போன்ற வேடங்கள் மிகப் பொருத்தமாக அவருக்கு அமைந்திருந்தன.
பாரதி, வ.உ.சி, பகத்சிங், திருப்பூர் குமரன், சாக்ரடீஸ், ஹேம்லட், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற பாத்திரங்களை தமது நடிப்பால் ரசிகர்களின் கண்முன் நிறுத்தியவர் சிவாஜி.
குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் அளித்து வெளியான சிவாஜி படங்கள் தான் எத்தனை எத்தனை!
தந்தையாக, அண்ணனாக, குடும்பத் தலைவனாக, நண்பனாக நடிப்பாற்றலை வெளிப்படுத்தியவர் நடிகர் திலகம்.
50 ஆண்டுகளில் நான்கு தலைமுறை நடிகர்களோடு நடித்தபோதும் சரி, எண்ணற்ற இயக்குநர்கள் இயக்கியபோதும் சரி. கடைசிப் படம் வரை தனது தனித்தன்மையை தக்க வைத்துக் கொண்டவர் சிவாஜி.
தாதாசாகேப் பால்கே, பத்மஸ்ரீ, கலைமாமணி உள்ளிட்ட விருதுகளைப் பெற்ற சிவாஜி கணேசன் நடிப்புக்கு ஒரு பல்கலைக்கழகம்.