ரூ.35 கோடி ஜிஎஸ்டி ஏய்ப்புக்காக ஆம்பூரை சேர்ந்தவர் கைது

35 கோடி ரூபாய் ஜிஎஸ்டி ஏய்ப்புக்காக வேலூர் மாவட்டம் ஆம்பூரைச் சேர்ந்த ஒருவரை சென்னை வெளிப்பகுதிக்கான ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் துறையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபரும், அவரது கூட்டாளிகளும் 36 போலி நிறுவனங்களைத் தொடங்கியுள்ளனர். மற்ற நபர்களின் கே.ஒய்.சி. ஆவணங்களை முறைகேடாகப் பயன்படுத்தி, ஜிஎஸ்டி பதிவு செய்துள்ளனர்.

உண்மையான ரசீது அல்லது பொருள்கள் வழங்கல் இல்லாமல் 250 கோடி ரூபாய் மதிப்புக்கான விலைப்பட்டியல் தயாரித்து வழங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.

இது 35 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நோக்கம் கொண்டது என்பதோடு, மேலும், பல உற்பத்தியாளர்களும், சேவை அளிப்பவர்களும் இதே அளவு தொகைக்கு ஜிஎஸ்டி ஏய்ப்பு செய்ய இது உதவி செய்துள்ளது.

இந்த மோசடி குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு ஆதாரங்களைத் திரட்டுவதற்காக பல சோதனைகள் நடத்தப்பட்டு பின்னர், அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்ட பின் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை வெளிப்பகுதிக்கான ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் துறை ஆணையர் ரவீந்திரநாத் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே