தஹில் ரமானியை இடமாற்றும் பரிந்துரையை எதிர்த்த மனு தள்ளுபடி

தலைமை நீதிபதியாக இருந்த வி.கே.தஹில் ரமானியை  இடமாற்ற செய்ய பரிந்துரையை எதிர்த்து தாக்கல் செய்யபட்ட மனு விசாரணைக்கு உகந்தது இல்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிமன்ற தலைமை நீதிபதி தஹீல்ரமானியை மேகலாய உயர் நீதிமன்றத்திற்க்கு மாற்றம் செய்த உச்ச நீதிமன்ற கொலிஜீயத்தின் பரிந்துரையை  ரத்து செய்ய கோரி வழக்கறிஞர் கற்பகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தொடர்ந்திருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என்பது குறித்து நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேசசாயி அடங்கிய அமர்வில் கடந்த 20ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது மனு தாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 2010ம் ஆண்டு  ஆளுநர் ஒருவர் மாற்றம் செய்தததை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் பொது முக்கியதுவம் வாய்ந்த விவகாரங்களில் தனி நபர்கள் வழக்கு தொடரலாம் என தீர்ப்பு அளித்துள்ளதாக தெரிவித்தார்.

அரசியல் சாசனம் 222ஆவது பிரிவில் நீதிபதிகளை இடம் மாற்றம் செய்வதை குறித்து கூறபட்டுள்ளதே தவிர, தலைமை நீதிபதிகளை இடமாற்றம் செய்வதை பற்றி கூறபடவில்லை  எனவும் அவர் வாதிட்டார்.

அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள் பாதிக்கப்பட்டதாக கருதும் நீதிபதிகள்தான் வழக்கு தொடர முடியும், மற்றவர்கள் வழக்கு தொடர முடியாது என உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை  சுட்டிக்காட்டினர்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை உயர் நீதிமன்றத்தால் திருத்தி அமைக்க முடியாது என்ற நீதிபதிகள், தலைமை நீதிபதியும் மற்ற நீதிபதிகளும் சமமானவர்கள்தான் என்றும், நிர்வாக ரீதியில் மட்டுமே ஒருவர் உயர் பதவியான தலைமை நீதிபதி பதவியை வகிக்கிறார் என குறிப்பிட்டனர்.

அந்த வகையில் பணியிடம் மாற்றம் செய்யலாம் என அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக நீதிபதிகள் விளக்கம் அளித்து, இந்த மனு விசாரணைக்கு உகந்ததா? இல்லையா? என்பது குறித்த தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், மனு விசாரணைக்கு உகந்தது இல்லை என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே