கல்லூரி மாணவி மீது ஆசிட் வீச்சு..

காதல் விவகாரத்தில், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவி மீது இளைஞன் ஒருவன் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உடற்கல்வி பட்டப்படிப்பு இரண்டாம் ஆண்டு படித்துவரும் மாணவி ஒருவரை, குத்தாலத்தைச் சேர்ந்த முத்தமிழன் என்பவன் பள்ளியில் படித்தபோதே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவனுடைய போக்கு பிடிக்காமல் மாணவி தொடர்பை தவிர்த்து வந்துள்ளார்.

இதனால் மனமுடைந்த முத்தமிழன் 2 நாட்களுக்கு முன்பு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பல்கலைக் கழக விருந்தினர் மாளிகை அருகே நேற்று மாணவி நடந்து வந்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், மாணவி செருப்பைக் காட்டி அவனை எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த முத்தமிழன், கழிப்பறையை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ஆசிட்டை மாணவியின் மீது வீசியுள்ளான். முகம் மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டதால் அலறித் துடித்த மாணவியை, அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

சம்பவ இடத்தில் இருந்தவர்கள், முத்தமிழனுக்கு தர்மஅடி கொடுத்தனர். இதில் காயமடைந்த முத்தமிழன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளான். தகவல் அறிந்த அண்ணாமலை நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே