அயோத்தி வழக்கில் அக்.18 உடன் வாதங்களை முடித்துக் கொள்வதில் உச்சநீதிமன்றம் உறுதி

அயோத்தி வழக்கில், வாதங்களை முன்வைப்பதற்கான கால அவகாசம், அக்டோபர் 18ஆம் தேதிக்குப் பிறகு ஒருநாள் கூட நீட்டிக்கப்பட மாட்டாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

அயோத்தியில், பாபர் மசூதி – ராம் ஜென்ம பூமி தொடர்பான 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கில் சன்னி வக்பு வாரியம், இந்து மகா சபா மற்றும் நிர்மோகி அகாரா அமைப்புகள் நிலத்தை பகிர்ந்து எடுத்துக் கொள்ள அலகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010ஆம் ஆண்டில் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் மத்தியஸ்த முயற்சி தோல்வி அடைந்ததை அடுத்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் டி.ஒய். சந்திரசூட், எஸ்.ஏ. பாப்டே, அசோக் பூஷன் மற்றும் அப்துல் நசீர் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் வழக்கின் விசாரணை நாள்தோறும் நடைபெற்று வருகிறது.

விசாரணையானது இன்று 32ஆவது நாளை எட்டியுள்ளது. ஏற்கெனவே இந்த வழக்கு தொடர்பான வாதங்களை அக்டோபர் 18ஆம் தேதிக்குள் முடித்துக் கொள்ளுமாறு நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில், இன்றைய விசாரணையின் போது, வழக்கின் வாதங்களை முன் வைப்பதற்கான கால அவசாகம் அக்டோபர் 18ஆம் தேதிக்குப் பின் ஒருநாள் கூட நீட்டிக்கப்பட மாட்டாது என நீதிபதிகள் கூறினர். 

உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாமே